
திருப்பரங்குன்றம், ஏப்.08- திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் முன்னிலையில் சுப்பிரமணியர்- தெய்வானை திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை தேரோட்டம் நடக்கிறது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி பெருவிழா தொடங்கியது. சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க பல்லக்கு, மாலையில் தங்க மயில், தங்க குதிரை, வெள்ளி பூதம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
முக்கிய நிகழ்ச்சியாக பட்டாபிஷேகம் நேற்று மாலை கோவிலில் உள்ள ஆறு கால் மண்டபத்தில் நடந்தது. இதையொட்டி சுப்பிரமணியர், தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியர் தெய்வானையுடன் ஆறு கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு வேத மந்திரங்கள் முழங்க சுப்ரமணிய சுவாமிக்கு செங்கோல், சேவல் கொடி சாற்றி பட்டாபிஷேகம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி சுந்தரேசுவரர் முன்னிலையில் சுப்பிரமணியர், தெய்வானை திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.