
திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா விமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது; இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு “ரெங்கா.. கோவிந்தா..” என்ற கோஷம் விண்ணதிர தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடப்பாண்டு சித்திரை திருவிழா கடந்த ஏப்.18 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் உற்சவத்தில் தினந்தோறும் நம்பெருமாள் தங்கக் கருட வாகனம், யாளி வாகனம், யானை வாகனம், தங்கக்குதிரை வாகனம், பூந்தேர், கற்பக விருட்ச வாகனம் என்று பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரைத் தேரோட்டம் நேற்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த கிளிமாலை, பட்டு வஸ்திரங்கள் அணிந்து, முத்து பாண்டியன் கொண்டை அலங்காரத்துடன் நம்பெருமாள் நேற்று அதிகாலை மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு கண்டருளினார்.
அலங்கரிக்கப்பட்ட சித்திரைத் திருத்தேர் தட்டில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சரியாக காலை 6.15 மணிக்கு, பக்தர்களின் “ரெங்கா… ரெங்கா.. கோவிந்தா.. கோவிந்தா…” என்ற கோஷங்கள் விண்ணதிர தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. பக்தர்கள் வெள்ளத்தில் அழகாக ஆடி அசைந்தபடி, நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்த சித்திரைத்தேர், காலை 9.45 மணிக்கு நிலையை வந்தடைந்தது.
திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கிராம மக்கள் விழாவில் பங்கேற்றனர். தேரோடும் வீதிகளில் பெருந்திரளானோர் தீபம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினி தலைமையில், 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.