
தி.மலை, உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை விநாயகர், முருகர், அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோவில் சாமி சன்னதி முன்பு பஞ்ச மூர்த்திகள் அலங்கார ரூபத்தில் எழுந்தருள, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்ப நேற்று காலை 6.30 மணிக்கு தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.
இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் தர்ப்பகராஜ், போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன், அ.தி.மு.க., எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் டிஸ்கோ குணசேகரன், மாமன்ற உறுப்பினர்கள் டாக்டர் பழனி, பொறியாளர் கணேசன், அண்ணாமலையார் கோவில் தக்கார் டாக்டர் மீனாட்சி சுந்தரம், வக்கீல் அருள்குமரன், ரேடியோ ஆறுமுகம் உள்ளிட்ட சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று தொடங்கிய கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்களுக்கு நடைபெறும். காலை மற்றும் இரவு நேரங்களில் பஞ்ச மூர்த்திகள் கோவில் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். இதில் வருகிற 29-ம் தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும், அடுத்த நாள் 30-ந் தேதி மகா தேரோட்டமும் நடைபெறும்.
கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான தீப தரிசன விழா டிசம்பர் மாதம் 3-ந் தேதி நடைபெறும். அன்று அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் அண்ணாமலையார் கோவில் தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளி ஆனந்த தாண்டவம் ஆட 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
தீப தரிசன நாளில் சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை வலம் வந்து வணங்குவர். கார்த்திகை தீப தரிசன பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார் ஈடுபடுவார்கள், தீப தரிசனம் காண வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான முறையில் செய்யப்பட்டு வருகிறது.
