
திருவனந்தபுரம், ஜூன். 11- சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆனி மாத பூஜைக்காக வருகிற 15-ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துகிறார். இதனை தொடர்ந்து கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்படும். அதைத்தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு 18-ம் படி வழியாக சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. கோவில் கருவறை மற்றும் சன்னிதான சுற்றுப்புற பகுதிகளை சுத்தம் செய்யும் பணி நடைபெறும்.
இதையடுத்து 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை 5 நாட்கள் கோவிலில் வழக்கமான பூஜைகளுடன் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை நடைபெறும். இசைக்கப்பட்டு இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
வழக்கம் போல் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லிலும் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.